Published : 25 Oct 2017 08:49 AM
Last Updated : 25 Oct 2017 08:49 AM

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது: இந்த ஆண்டு இயல்பான மழை இருக்கும்

தமிழகத்துக்கு அதிக மழைப் பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, படிப்படியாக பிற பகுதிகளுக்கும் பரவி அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது நாட்டில் சராசரி அளவில் மழை பெய்துள்ளது.

ஆனால், அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் மட்டும் இயல்பைவிட 31 சதவீத கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இன்றுடன் முழுமையாக விடை பெறுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26-ம் (நாளை) தேதி தொடங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகம், கேரளா, ராயலசீமா, ஆந்திரா, தெற்கு கர்நாடகம் ஆகிய தென் தீபகற்பத்தில் இயல்பை ஒட்டியே மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x