Published : 12 Jul 2014 10:00 AM
Last Updated : 12 Jul 2014 10:00 AM
பணியிலிருக்கும் பெற்றோர் உயிரிழந்தால், திருமணமான அவர்களின் மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோருவதற்கான உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி.உஷாராணி மனு தாக்கல் செய்திருந்தார். “வருவாய்த் துறையில் கிராம உதவியாளராகப் பணியாற்றிய எனது தந்தை கடந்த 2008-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து கருணை அடிப்படையில் எனக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும் எனக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்துவிட்டனர். ஆகவே, எனக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உஷாராணி தனது மனுவில் கோரியிருந்தார்.
எனினும் பணியிலிருக்கும் பெற்றோர் உயிரிழப்பதற்கு முன்பே அவர்களது மகளுக்கு திருமணம் ஆகியிருந்தால், திருமணம் ஆன மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கோரும் உரிமை இல்லை என்று அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சத்திய நாராயணன், பணியிலிருக்கும் பெற்றோர் உயிரிழந்தால் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற திருமணமான மகனுக்கு உரிமை உள்ளபோது, திருமணமான மகளுக்கு மட்டும் உரிமை இல்லை என மறுப்பது பாலினரீதியாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான 18.6.2012-ம் தேதி அரசாணை செல்லாது எனக் கூறி அதனை ரத்து செய்தார். ஆண்களும், பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த அரசாணை சட்டத்துக்கு முரணாக உள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT