Published : 22 Oct 2017 10:23 AM
Last Updated : 22 Oct 2017 10:23 AM
சைதாப்பேட்டை தொகுதியில் 3 இடங்களில் திமுக சார்பில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு, சுகாதார, மருத்து வப் பணிகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை கோட்டூர்புரம் கலைஞர் திடலில் நேற்று காலை நடந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமை மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதேபோல, ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு அருகிலும், ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகர், எம்.பிளாக், 73-வது தெருவிலும் இலவச மருத்துவ முகாமை அவர் தொடங்கிவைத்தார். மேற்கண்ட 3 இடங்களிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பயன் பெற்றனர்.
இதுபற்றி மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மேலும் கூறியதாவது:
சைதை தொகுதிக்கு உட்பட்ட 3 இடங்களில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. பில்ரோத், கற்பக விநாயகா, பார்வதி மருத்துவ மனைகள் மூலம் இந்த முகாம் நடத்தப்பட்டது. மருத்துவர்கள் உட்பட 46 பேர் பங்கேற்றனர். இதில், டெங்கு போன்ற காய்ச்சல் இருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மூலம் இலவசமாக மருத்துவம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, அடுத்த வாரம் வேறு இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT