Published : 06 Jun 2023 04:11 AM
Last Updated : 06 Jun 2023 04:11 AM

ஒழுங்குமுறை ஆணைய அனுமதியின்பேரில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த திட்டம்

சென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின் பேரில், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மின் வாரியம் கைவிட வேண்டும் என்று நுகர்வோர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஊழியர் சம்பளம், உபகரணங்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல், மின் விநியோக வழித்தடம், துணை மின் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. இதற்காக, மத்திய மின் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசிடம் இருந்து மின் வாரியம் வட்டிக்கு கடன் பெறுகிறது. இந்த வகையில்மின் வாரியத்துக்கு தற்போதுரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.

மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்தஆண்டு ஜூலை 18-ம் தேதி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்.10-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, வீடுகளுக்கு 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50-ம்,401-500 யூனிட் வரை ரூ.6-ம், 501-600 யூனிட் வரை ரூ.8-ம், 601-800 யூனிட் வரை 9-ம், 801-1,000 யூனிட் வரை ரூ.10-ம்,1,001 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டது. உயர் அழுத்தப் பிரிவில் தொழிற்சாலைகளுக்கான கட்டணம் ஒரு யூனிட் ரூ.6.35-ல் இருந்து ரூ.6.75 ஆகவும் உயர்த்தப்பட்டது.

கடந்த ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், வரும் 2026-27-ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல்மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் மாத நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவாக உள்ளதோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 4.70 சதவீதம் இருந்தது.இதன் அடிப்படையில் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள அனுமதியின்பேரில், மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும்செலவுகளை சமாளித்து, கடன் அளவை குறைப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மின் நுகர்வோர் கூறும்போது, ‘‘ஏற்கனவே கடந்த ஆண்டுசெப்.10-ம் தேதி மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதையே செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இந்த நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். கடன் நெருக்கடியை சமாளிக்க, வேறு வழிகள் குறித்து மின் வாரியம் யோசிக்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மின் வாரியம் கைவிட வேண்டும். இதுதொடர்பாக மின் வாரியத்துக்கு தமிழக அரசு தக்க அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x