

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் மாணவியின் தாயாரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 1,150 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை கடந்த 15-ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வருகை தந்த மாணவியின் தாயார் செல்வி, “இந்த வழக்கிலிருந்து பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகியோரை நீக்கியுள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஆசிரியர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக வரும் 5-ம் தேதி (நேற்று) எனது கருத்தை தெரிவிக்குமாறு விழுப்புரம் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி எனக்கு மனு அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீதிமன்றத்தில் நான் எப்படி கருத்தை தெரிவிக்க முடியும். ஒருதலைப்பட்சமாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஒரு நபர் விசாரணை கமிஷன் நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதனிைடயே சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை. நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று மாணவியின் தாயார் செல்வி விழுப்புரம் தலைமைகுற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நடுவர் புஷ்பராணி குற்றப்பத்திரிகை நகல் வழங்க ஒப்புதல் தெரிவித்தார். பின்னர் மாலையில் செல்வியிடம் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. இதனை படித்து பார்க்க வேண்டியிருப்பதால் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் அளித்து விசாரணையை நடுவர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.