சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயக்கப்படாத பேட்டரி கார்: சிரமப்படும் அறுவை சிகிச்சை நோயாளிகள்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயக்கப்படாத பேட்டரி கார்: சிரமப்படும் அறுவை சிகிச்சை நோயாளிகள்

Published on

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி காரை இயக்காமல் மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் நடக்க முடியாத நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்யப்பட்டோர் உள்ளிட்டோரை சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெச்சர் போன்றவை மூலம் மருத்துவப் பணியாளர்கள் வார்டுகளுக்கு அழைத்துச் செல்வர். சில சமயங்களில் நோயாளிகளை அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும்.

இதைத் தவிர்க்க, அதிகளவில் நோயாளிகள் வரும் மருத்துவமனைகளுக்கு பேட்டரி கார்கள் வழங்கப்பட்டன. அதன்படி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2012-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தில் பேட்டரி கார் வழங்கப்பட்டது.

இந்த பேட்டரி கார் 4 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து புகார் எழுந்ததை யடுத்து, பேட்டரி காரை இயக்கி வந்தனர்.

இந்த காரில் ஓட்டுநர் உட்பட 8 பேர் அமர முடியும். இந்த காரின் நீளம் 6 அடி வரை இருப்பதால், சாய்தளத்தில் செல்வதற்கு சிரமமாக இருந்தது.

இதையடுத்து, பேட்டரி காரை தரைத் தளத்தில் மட்டும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, அங்கும் இயக்காமல் அந்த காரை ஒரு மூலையில் நிறுத்தி வைத்துள் ளனர். நடக்க முடியாத நோயாளிகள் சிரமமடைந்து வரும் நிலையில், பேட்டரி காரை இயக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, "பேட்டரி காரை மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்காகப் பயன்படுத்தி வருகிறோம். பேட்டரி காரை இயக்கவில்லை என்ற புகார் வரவில்லை" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in