Published : 02 Apr 2014 10:51 AM
Last Updated : 02 Apr 2014 10:51 AM

ஐசிஎப்-ல் தீப்பிடிக்காத ரயில் பெட்டிகள் தயாரிப்பு:இந்தியன் ரயில்வே வாரிய தலைவர் தகவல்

பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தீப்பிடிக்காத ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியன் ரயில்வே வாரிய தலைவர் அருண்நேந்திர குமார் தெரிவித்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ரயில்வே 160-வது ஆண்டு புகைப்படக் கண்காட்சியை அருண்நேந்திர குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் அதிநவீன வசதிகளுடன் தீப்பிடிக்காத பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பெட்டிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்படுகிறது. இத்தகையப் பெட்டிகள் தயாரிக்க கூடுதலாக ரூ.250 கோடி தேவைப்படுகிறது.

ரயில் பெட்டிகளில் திடீரென்று தீப்பிடித்தால் அதுபற்றி இன்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கும் வகையில் புதிய கருவி தயாரிக்கப்பட்டு வருகிறது. மது உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்வதுதான் ரயில்களில் தீப்பிடிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தண்டவாளங்களில் விரிசல் ஏற்படுவதற்கு தட்பவெப்ப நிலைதான் காரணம். தண்டவாள விரிசலைக் கண்டறிவதற்கு கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x