Published : 30 Oct 2017 11:24 AM
Last Updated : 30 Oct 2017 11:24 AM

5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடர வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 30-ம் தேதி தொடங்கி நவம்பர் 5-ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

அக்டோபர் 30-ம் தேதி: கடலோர தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

அக்டோபர் 31-ம் தேதி: தெற்குக் கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

நவம்பர் 1ம் தேதி: தெற்குக் கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது

நவம்பர் 2-ம் தேதி: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

நவம்பர் 3-ம் தேதி: தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இலங்கை அருகே தற்போது நிலைகொண்டுள்ளது.

அதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x