Published : 05 Jun 2023 04:25 AM
Last Updated : 05 Jun 2023 04:25 AM

ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை: சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி தகவல்

ஒடிசா சென்று திரும்பிய அமைச்சர் உதயநிதி, சென்னையில் முகாம் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரயில் விபத்து நடந்த பாலசோரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்பு பணிகள், ரயில் மூலம் பயணிகள் சென்னை திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்தார். உடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் யாரும் தமிழர்கள் இல்லை என்று, ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களை தமிழகம் அழைத்து வரவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் முகாமிட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது அவர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, அங்கு நடந்து வரும் மீட்பு, நிவாரண பணிகள் குறித்துகேட்டறிந்தார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அதிகாரிகளை உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் கடந்த 3-ம் தேதி சந்தித்து பேசினர். பின்னர், பாலசோர் பக்கீர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தனர்.

ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகத்தில் ஒடிசா தலைமைச் செயலர் பிரதீப் ஜெனாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து, மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்கள், சிகிச்சை முடித்து திரும்பியோர் பற்றிய விவரங்களை கேட்டறிந்தோம். ஒடிசா அரசு மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள், நம்பிக்கை, ஆறுதல் தருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

பின்னர், புவனேஸ்வர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ‘இங்கு இந்தியாவின் வெவ்வேறு ஊர்களில் இருந்து தவிப்புடனும், ஏக்கத்துடனும் ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம்உள்ளன. அலுவலர்கள் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இது, விபத்தில் சிக்கியோரை அடையாளம் காண்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது’ என்று அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் நேற்று மாலை புவனேஸ்வரில் இருந்து சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் கூறியதன் பேரில், நாங்கள் ஒடிசா சென்று, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு செய்தோம். அங்கு தமிழர்கள் யாரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்படவில்லை. சவக்கிடங்குக்கும் தமிழர்களின் சடலங்கள் எதுவும் வரவில்லை என்பது தெரிந்தது.

முதல்வருடன் காணொலியில் பேசும்போது, 28 பேர் மட்டும் பயணித்தது தெரிந்தது. பிற்பகல் 1.30 மணிவரை ஆய்வு செய்தோம். ஒடிசா அரசு அழைப்பு மையத்தில் கேட்டபோதும், தமிழர்களை காணவில்லை என எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என்றனர்.

பயணிகளில் 8 பேரை மட்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிந்தது. சமீபத்தில் கிடைத்த தகவல்படி அதில் 2 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது அனைவரும் நலமாக இருப்பதாக, உடன் இருந்த பயணிகள் மூலம்தகவல் கிடைத்துள்ளது. தமிழக அதிகாரிகள் அங்குதான் தங்கியிருக்கின்றனர். அவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும் என நம்புகிறோம். உயிரிழந்தவர்களின் படங்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது. அதில் 88 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்தும், மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, முதல்வரின் முகாம் அலுவலகத்துக்கு சென்ற அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் ஒடிசாவில் நடந்த நிகழ்வுகளை முதல்வரிடம் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x