Published : 24 Oct 2017 09:40 AM
Last Updated : 24 Oct 2017 09:40 AM
மக்களுக்கு சேவை செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சிவகாசியில் திருத்தங்கல் சாலையில் உள்ள அண்ணாமலையார் நகர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
அதிமுக சாய்ந்துவிடும் எனப் புலம்புவோர் அதிமுக வரலாறு தெரியாதவர்கள். இது அசைக்க முடியாத ஆலமரம். தாங்கிப் பிடிக்க ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ளார்கள். ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நாங்கள் எத்தனை தியாகங்கள் செய்தேனும் அதிமுகவை பாதுகாப்போம்.
டெங்கு காய்ச்சலை வைத்து அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். மழைக் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் வருகிறது. அரசு அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் டெங்கு ஆட்சி என்கிறார். மக்களுக்கு சேவை செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறது தமிழக அரசு.
சிவகாசி நகராட்சியோடு திருத்தங்கல், சித்துராஜபுரம், ஆனையூர், சாமிநத்தம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்க அரசு பரிந்துரைக்கும். புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடரும் என்றார். விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT