Last Updated : 24 Oct, 2017 12:31 PM

 

Published : 24 Oct 2017 12:31 PM
Last Updated : 24 Oct 2017 12:31 PM

அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக இலவச பிஸ்கட் வழங்கும் திட்டம்: புதுச்சேரி முதல்வர் தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக இலவச பிஸ்கட் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

புதுச்சேரியில் கடந்த 2002-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் ரங்கசாமியின் முயற்சியால் இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக இலவசமாக பால் மற்றும் பிஸ்கட் வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயரால் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அப்போது தொடங்கி வைத்தார். இதனிடையே புதுச்சேரி அரசின் கடும் நிதிப்பற்றாக்குறை காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு இந்தத் திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து பால் மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது பிரிகேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை காலை நேரத்தில் சூடான பால்  வழங்கப்பட்டு வருகிறது.

இத்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக பிஸ்கட் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை முயற்சி செய்து வந்தது. அதனடிப்படையில் தற்போது முதற்கட்டமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக பிஸ்கட் வழங்கும் திட்டத்தை ஐயங்குட்டிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 210 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 19,800 மாணவர்களுக்கு  வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் முதல்கட்டமாக இலவச பிஸ்கட் வழங்கப்பட உள்ளது.

பின்னர் அனைத்து வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் பிஸ்கட் வழங்கும் திட்டம்  விரிவுப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்தத் திட்டம் முற்றிலும் தனியார் தொண்டு நிறுவன நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.  இன்று நடைபெற்ற தொடக்க விழாவில்  கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீய்பாய்ந்தான், கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x