ஒடிசா ரயில் விபத்து: தமிழக பாஜக சார்பில் உதவி குழு அமைப்பு

ஒடிசா ரயில் விபத்து: தமிழக பாஜக சார்பில் உதவி குழு அமைப்பு
Updated on
1 min read

சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேரிட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையிலும் தமிழக பாஜக சார்பில் உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் விபத்தில் சிக்கிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு உதவி செய்து, அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்பும் வரைதுணைபுரியவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், ரயில்வே பயணிகள் வசதி ஆலோசனைக் குழுவின் தேசிய உறுப்பினர் கே.ரவிச்சந்திரன்,

பிற மொழிப் பிரிவு மாநிலத் தலைவர் கே.பி.ஜெயக்குமார், ஊடகப் பிரிவு முன்னாள் மாநிலத் தலைவர் ஏஎன்எஸ்.பிரசாத் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒடிசா விரைந்து, மீட்புப் பணிகளை மேற்கொள்வர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு, தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர், மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in