

மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023 முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தெரிவிக்க கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் கருத்து தெரிவிக்க முடியாத நிலைஉள்ளது. எனவே மத்திய அரசின் அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வன திருத்த பாதுகாப்பு மசோதா அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை நீக்கக்கோரி மத்திய அரசு சார்பில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தடையைவிலக்கக்கோரி மத்திய அரசு உடனடியாக கோருவதற்கு என்ன அவசரம்? உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு வழக்குகளில் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை மத்திய அரசும், நிதி அமைச்சகமும் நிறைவேற்றுவதில்லை.
குறிப்பாக மதுரையில் கடன்வசூல் தீர்ப்பாயம் பல ஆண்டுகளாக தலைவர் இன்றி செயல்படாமல் உள்ளது. அதற்கு தலைவரை நியமிக்க உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.
இதுபோல் பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றவில்லை. ஆனால் நீதிமன்றம் தடை விதித்தால் அதற்கு எதிராக கோரிக்கை விடுக்கிறீர்கள். இதை எப்படி ஏற்க முடியும். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றனர்.
பின்னர் தடையை விலக்கக்கோரி மனு தாக்கல் செய்தால்விசாரணைக்கு எடுத்துக்கொள் வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.