

சென்னை: சிவில் நீதிபதி பதவியில் 246 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு நீதித்துறை பணியின்கீழ் வரும் சிவில் நீதிபதி பதவியில் 246 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ம்தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29-ம் தேதிகளிலும் நடைபெறும்.
முதல்நிலை தேர்வுக்கு புதிதாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்ட பட்டதாரிகளுக்கு வயது வரம்பு 22 முதல் 29 வரை. வழக்கறிஞர்களுக்கு 25 முதல் 37 வரை (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயது வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையவர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.