

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.
ராமேசுவரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து நேற்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2 ஆயிரம் பேர் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தென்னரசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி படகில் இருந்த மீனவர்கள் ஜார்ஜ், சுதன், கனகராஜ் சுமித், பரலோகராஜ், கோபி, ஆரோக்கிய ரூபட், பிரேம்குமார், தினேஷ், ராஜேஸ் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்று, இலங்கை மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 10 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 3 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் 29 பேரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் நீடிக்கிறது. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
எனவே, மத்திய அரசு இலங்கை அரசுடன் உடனடியாக பேசி, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும். இனியும் கைது நடவடிக்கைகள் தொடராத அளவுக்கு, வெளியுறவுத் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலை அளிக்கிறது. மொத்தம் 83 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். 252 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் நலன் கருதியும், பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட ஏதுவாகவும் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கவும், தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளைத் தடுக்கவும் மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.