Published : 31 Oct 2013 12:25 PM
Last Updated : 31 Oct 2013 12:25 PM

குருப்-2 தேர்வு தேதி மாற்றம் இல்லை - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குருப்-2 தேர்வில் உள்ளடங்கிய 1065 காலிப் பணியிடங்களை நிரப்புதற்கான எழுத்துத் தேர்வை டிசம்பர் 1-ம் தேதி நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதே நாளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வும் நடைபெறுகிறது. மெயின் தேர்வுக்கு தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், குருப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள், இரு தேர்வுகளையும் எழுதும் வகையில் குருப்-2 தேர்வை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி.க்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 1-ம் தேதியே குருப் 2 தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பவதாவது:

டிசம்பர் 1-ம் தேதி, வேறு சில தேர்வு வாரியம் மற்றும் ஆணையத்தின் போட்டித் தேர்வுகளும் நடக்கவிருப்பதைச் சுட்டிக்காட்டி, குருப்-2 தேர்வை வேறு ஒரு நாளில் நடத்துமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

7 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்தக் கோரிக்கைகளை தேர்வாணையம் பரிசீலித்தது. குருப்-2 தேர்வுக்கு சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து வரும் வார இறுதி நாட்களில் மற்ற தேர்வு வாரியம் மற்றும் ஆணையங்களின் போட்டித் தேர்வுகள், துறைத் தேர்வுகள் இருக்கின்றன.

எனவே, குருப் 2 தேர்வை விரைந்து முடித்து முடிவுகளை அறிவிக்கும் பொருட்டு ஏற்கனவே அறிவித்தபடி குருப்-2 முதல்நிலைத் தேர்வை டிசம்பர் 1-ம் தேதியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஷோபனா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x