Published : 26 Sep 2013 05:08 PM
Last Updated : 26 Sep 2013 05:08 PM

சர்வேயர் பணியில் சேர உதவும் தொழில்நுட்பப் படிப்பு

அரசாங்கத்தில் உள்ள சர்வேயர், வரைவாளர் பணியில் சேர கட்டாய கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள புவி-தகவலியல் மற்றும் நிலஅளவையியல் (ஜியோ-இன்பர்மேடிக்ஸ் மற்றும் சர்வே டெக்னாலஜி) பட்டயப் படிப்பு சென்னை, திருச்சி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி கிடைத்ததும் இந்த படிப்பு தொடங்கப்படும்.

பட்டயப் படிப்புகள்

10-ம் வகுப்பு படித்து முடித்ததும் விரைவாக வேலையில் சேர விரும்பும் மாணவர்கள் ஐ.டி.ஐ. தொழில்பயிற்சியில் சேரு வார்கள் அல்லது பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் பட்டயப் படிப்பை தேர்வுசெய்வது வழக்கம். பாலிடெக்னிக் முடித்த வுடன் பணியில் இருந்தபடியே பி.இ. படிக்கவும் வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் பொறியியல் பட்டயப் படிப்பில் சேரவும் மாணவ-மாணவிகளில் ஒரு பகுதியினர் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் உள்பட 471 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன், கணினி அறிவியல்,ஜவுளித் தொழில் நுட்பம், அச்சுத்தொழில்நுட்பம், லெதர் டெக்னாலஜி என பல்வேறு விதமான பொறியியல் படிப்புகள் உள்ளன.

ஜியோ-இன்பர்மேடிக்ஸ்

வழக்கமான அடிப்படை பொறியியல் பாடப்பிரிவுகளுடன் மாறிவரும் இன்றைய வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அவ்வப்போது புதிய புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது நிலஅளவை மற்றும் நிலப்பதிவேடு துறையில் சர்வேயர், வரைவாளர் (டிராப்ட்ஸ்மேன்) பதவிகளுக்கு கட்டாய கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள புவி-தகவலியல் மற்றும் சர்வே தொழில்நுட்பம் (ஜியோ-இன்பர்மேடிக்ஸ் மற்றும் சர்வே டெக்னாலஜி) என்ற பட்டயப் படிப்பு கொண்டுவரப்பட உள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ.க்கு விண்ணப்பம்

முதல்கட்டமாக சென்னை சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் இந்த புதிய படிப்பு கொண்டுவரப்படும். இதற்காக மாநில தொழில்நுட்ப கல்வி இயக்ககம், புது டெல்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) விண்ணப்பித்து அனுமதியை எதிர்நோக்கி உள்ளது. அனுமதி கிடைத்ததும் புதிய படிப்பு தொடங்கப்படும்.

தற்போது, சர்வேயர், வரை வாளர் பணிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 மூலமாக நேரடியாக நிரப்பப்பட்டு வருகின்றன. ஐ.டி.ஐ.யில் நில அளவை படித்தவர்களுக்கு இப்பணியில் முன்னுரிமை அளிக்கி றார்கள்.

படித்ததும் வேலை

புவி-தகவலியல் மற்றும் சர்வே தொழில்நுட்ப பட்டயதாரர்கள் படித்து முடிக்கும்போது அவர்கள் மட்டுமே சர்வேயர், வரைவாளர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். சமீப காலமாக சர்வேயர், வரைவாளர் பணி இடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்பட்டு வருவதால் புவி-தகவலியல் மற்றும் சர்வே தொழில்நுட்ப பட்டயப் படிப்பில் சேருவோருக்கு அரசு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x