

‘தெங்கு’ என்றால் தென்னை. தெற்கிலிருந்து வந்ததால், அதற்கு இப்படி யொரு பெயர் வந்ததாக மொழியாளர்கள் சொல்கிறார்கள். பொதுவாகத் தேங்காய் என்று சொல்லப்படுவதை, முன்றுறை அரையனார் என்கிற சங்க மருவிய காலப் புலவர் பழமொழி நானூற்றில் ’தெங்கு’ எனப் பயன்படுத்தினார்.
தானும் பயன்படுத்தாமல் அடுத்தவர்களுக்கும் பயன்படாமல் ஒரு பொருள் கையாளப்படுவதை, ’நாய் பெற்ற தெங்கம்பழம்’ எனப் பழமொழிப் பாடலாகப் பாடியுள்ளார்.
குரங்கு கையில் கிடைத்த பூமாலை, நாயிடம் கிடைத்த தெங்கம் இரண்டும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடைய இரண்டு பழமொழிகள். முன்னது, பயன் தெரியாது அழித்தொழிப்பது. பின்னது யாருக்கும் பயன்படாதிருப்பது. இதற்கும் பின்னே 'போல' என்கிற உவம உருபு சேர்ந்துவிட்டால், இந்தப் பழமொழிகள் நல்ல உவமையாகிவிடும்.
தேங்காய் எப்படிப் பழமாகும் என நெற்றிக்கண் விரிப்பவர்கள் உண்டு. காய் எப்படிக் கனியாகும்? பழம் என்பதும் கனி என்பதும் ஒன்றுபோலிருந்தாலும், ஒன்றல்ல. பழம் என்றால் முற்றியது என்று பொருள். அதாவது நெற்று. கனி என்பது கனிதல். எல்லாக் காய்களும் பழங்களாகும்; பழங்கள் எல்லாம் கனிகள் அல்ல.
வளர்தெங்கு
ஔவையார் மூதுரை பாடலில் 'வளர் தெங்கு' என்கிற சொல்லைப் பயன்படுத்து கிறார். ஒருவருக்கு நாம் நன்மை செய்கையில், அந்த நன்மையைக் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.
தென்னம்பிள்ளையாக (கன்று) இருக்கையில் நீரூற்றினால் அது நன்கு வளர்ந்து, தலையால் தண்ணீர் தரும். அதாவது தெங்கம்பழமாக நீர் தரும் என்பதை ’வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தரு தலால்’ என்கிறார்.