

இன்றைய ஜென்ஸீகளின் ’புள்ளிங்கோ’ ஸ்டைல் சிகையலங்காரம் பெரிய வர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. யோசித்துப் பார்த்தால் என்னுடைய கல்லூரிக் காலத்திலும் இத்தகைய விமர்சனங்களைத்தான் எதிர்கொள்ள நேர்ந்தது. காலம்தோறும் ஃபேஷன் மாறுவதும் அதை இளவட்டங்கள் வரவேற்றுக் கொண்டாடுவதும் மூத்த சமூகம் வசைபாடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
1978இல் கோடை விடுமுறைக்கு வழக்கம்போல கும்பகோணம் அருகே இருக்கும் கோவிந்தபுரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த சித்தப்பா, ‘புதுசாக ஸ்டெப் கட்டிங்னு ஒரு ஹேர் ஸ்டைல் வந்திருக்குடா’ என்றார்.
அது பற்றி விசாரித்துக்கொண்டு, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் எதிரே இருந்த சந்தில் அந்த சலூனைக் கண்டறிந்தேன். பம்பாய் சென்று சிறப்புப் பயிற்சி எடுத்து வந்தவர்தான் அங்கு ஸ்டெப் கட்டிங் வெட்டிக்கொண்டிருந்தார். புது கட்டிங்குக்கு மவுசு அதிகம் என்பதால், டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் அமர்ந்தேன்.