

கிராமங்களில் வேளாண்மைத் தொழில் முக்கியமானதாக இருந்தபோது, பல வகையான பயிர்களைச் சாகுபடி செய்ததுடன் பயறு, காய்கறி வகைகளையும், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துகளையும் ஊடுபயிராகப் பயிரிட்டனர். அதனால் ஆண்டு முழுவதும் வேளாண்மைத் தொடர்பான பணிகள் நடைபெற்றுவந்தன.
காலப்போக்கில் சாகுபடி முறை, பயிர் உற்பத்தி போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகத் தற்போது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வேளாண்மை தொடர்பான பணிகள் நடைபெறுகின்றன.
அதன் பிறகான காலத்தில் காடுகளுக்குச் செல்லாத நிலையில், அடுத்த ஆண்டிற்கான விதைப் பொருள்கள், உணவுப் பொருள் கள், தானிய வகைகளைச் சுத்தம் செய்து பதப்படுத்துவது, பயன்படுத்தும் வகையில் அவற்றைத் தயார் செய்வது, விறகுகள் சேகரிப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் உணவுப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் புளியைத் தயார் செய்வது கிராமங்களில் கோடைக் காலத்தின் மாலை நேரத்தில் முக்கிய வேலையாக இருந்துவருகிறது. இதற்காக, கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் சாகுபடி செய்யத் தகுதியற்ற நிலப்பரப்பு களிலும் தோப்புகளிலும் புளியமரங்களை வளர்த்து வருவது வழக்கம்.
கோடைக்காலம் தொடங்கும் நிலையில் மரங்களிலிருந்து விழும் புளியம்பழங் களைச் சேகரித்தும், மரத்திலிருந்து பறித்தும் புளியாக்குவது அவர்களின் முக்கிய வேலை. இன்றும் காற்றுடன் கூடிய மழை பெய்து ஓய்ந்த பின்னர், சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் புளியம்பழங் களைச் சேகரிப்பதில் கிராமத்து மக்கள் ஈடுபடுவதைக் காணலாம்.