

பாண்டியன்
கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்திற்கு ஓர் ஊரே விழா எடுத்துக் கொண்டாடி வருகிறது. ‘பனை எங்கள் அடை யாளம், அது எங்களின் வாழ்க்கைமுறையோடு இணைந்த ஒன்று’ என்கின்றனர் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பனையேறிகள். தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் பெருந்திரளானோர் பங்கேற்பது புதிதல்ல.
ஆனால் பனைமரத்திற்கு விழா எடுப்பதும், அதில் உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டினர் வரை பங்கேற்பதும் ஆச்சரியமானதுதான். “பனைமரங்கள் தமிழரின் அடையாளம், அவற்றைப் பற்றிய சரியான புரிதல் தற்போது இல்லை. இது தமிழரின் மரபோடு இணைந்த ஒன்று, அதனை மீட்கவும், பனையிலிருந்து கிடைக்கக்கூடிய பொருள்களையும், பனையேறுபவர்கள் பற்றிய விழிப்புணர்வும் நேரடியாக மக்களிடையே சென்றடையவும் தொடங்கப்பட்டதுதான் இந்தப் ‘பனைத் திருவிழா’” என்கிறார் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன்.