

கிராமங்களில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவோருக்குக் கோடைக்காலம்தான் ஓய்வுக் காலம். அன்றாடம் காட்டுக்குச் செல்ல
வேண்டிய தேவை கோடைக்காலத்தில் இல்லா விட்டாலும் விறகு சேகரிப்பது, தேவையற்ற மரங்கள், முள்ளை அகற்றுவது போன்றவற்றுக்காக அவ்வப்போது காடுகளுக்குச் செல்வது வழக்கம்.
ஆனால், முதிய பெண்கள் கோடைக் காலத்திலும் ஆடுகளை மேய்க்க, சில வகை மரங்களின் நெற்றுகளை எடுக்க, வேப்பம்பழங்களைச் சேகரிக்க போன்ற வற்றுக்காகக் காடுகளுக்குச் செல்வது உண்டு. நடுத்தர வயது ஆண்கள், பெண்கள் எவரும் இவற்றில் ஈடுபடுவதில்லை.
இதனால் கிடைக்கும் குறைந்த வருமானம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. ஆனால், வயதான பெண்கள் வேப்பம்பழங்களைச் சிறுகச் சிறுகச் சேகரித்து, அதற்கான பருவம் முடிந்தவுடன் விற்பனைசெய்வது வழக்கமாக இருந்துவருகிறது.
அவர்களின் உடல்திறனுக்கேற்ற வேலை இது. அதனால் கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் வயதான பெண்கள்தான் வேப்பம்பழச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.
நகரங்களில் வயதான பெண்கள் ஏரிக்கரை, பாலம், கடைத்தெருக்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்து விற்பனை செய்தாலும் கோடைக்காலத்தில் வேப்பங்கொட்டைகளைச் சேகரிப்பதிலும் ஈடுபடுகின்றனர்.
வேப்பெண்ணெய்க்கு...
பொதுவாக வேளாண் நிலத்தில் எப்பகுதியில் வேப்பமரம் உண்டானாலும், அதை இடையூறு எனக் கருதி அகற்று வதில்லை. வெயில் காலத்தில் நிழல் தரும் என்பதோடு, சில ஆண்டுகளில் மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் அல்லது விற்பனை செய்துவிடலாம் என்று கருதி அதனை அகற்றுவதில்லை.