

‘அட, வாங்க’ என்று இன்முகத்துடன் அழைத்து, இலங்கையின் அழகான தமிழில் விதவிதமான உணவு வகைகளைப் பேசிக்கொண்டே செய்து காட்டுகிறார் மித்ரகுமார் சசிகுமார். பாதி சமையலில் ‘சாப்பிட்டீங்களா?’ என்று அவர் கேட்பதற்கே ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்!
ஆறு மாதங்களுக்கு முன்புதான் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி, இதுவரை 67 சமையல் காணொளிகளை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் 2.17 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்! 5 மாதங்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக்கில் காணொளிகளைப் பகிரத் தொடங்கியிருக்கிறார். 1.7 லட்சம் பேர் இவரைப் பின்தொடர்கிறார்கள்!
ஆயிரக்கணக்கான சமையல் யூடியூப் அலைவரிசைகள் இருக்கும்போது, சமீபத்தில் தொடங்கி லட்சக்கணக்கில் மக்களின் மனங்களை இவர் கொள்ளை கொண்ட தற்குக் காரணங்கள் எளிமையானவை.
இலங்கைத் தமிழர்களின் அதிகம் அறியாத உணவு வகைகளோடு இந்திய உணவு வகைகளையும் அதிகம் மெனக்கெடாமல், வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே சமைத்து அசத்திவிடுகிறார்.