

விக்ருதி வருடத்து வைகாசி. எங்கள் சுற்றுவெளியில் கார்மழைக்காலம் முடிவுற்றிருந்த தருணம். வானத்தில் கோடைக் கருமுகில்கள் தோன்றிச் சாரல் மழை பொழியாமல் தாழ நகர்ந்துகொண்டிருந்தன.
நான் தாராபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் முதன்மைத் தார்சாலையில் உள்ள வஞ்சிப்பாளையம் பிரிவுக்கு எழுத்தாளர் சு.வெங்குட்டுவனைச் சந்திக்கப் போயிருந்தேன்.
அவர் விசைத்தறிக் கொட்ட கைக்குள் இயங்கும் விசைத்தறிகளை மேற்பார்வையிட்டபடியே இயற்கை இலக்கியம் குறித்துப் பேசிக் கொண்டே இருந்தார். அவருடைய அண்ணன் வந்து விசைத்தறியைப் பார்த்துக் கொண்டதும் கொட்ட கைக்கு வெளியே வந்தவர் சொன்னார்: “ஊதியூர் மலைக்குப் போலா மாங்க?” நானும் கல்லூரிக் காலத்தில் உள்ளூர் நணபர்களுடன் ஊதியூர் மலை சென்றிருக்கிறேன்.
இளமதிய வெயிலில் இருசக்கர வாகனத்தில் நாங்கள் புறப்பட்டோம். இருமருங்கும் தென்னந்தோப்புகள் கொண்ட குறுந்தார்ச்சாலையில் கிழக்கு நோக்கிப் பயணித்து ஊதியூர் மலையை அடைந்தோம்.
மலையடி வாரத்தில் மயில்கள் அகவின. செட்டி தம்பிரான் சித்தர் சமாதிக்குச் செல்லவில்லை. கல்குறிஞ்சி மண்டபத்து மயில்வாகனர் சிலை யிடம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுக் கல்படிகளில் மேலேறினோம்.
மலை ஏகாந்தமாகக் கிடந்தது. கல்படிகள் முடியும் இடத்தின் வலப்புறத்தில் இருந்த உத்தண்ட வேலாயுதசாமி கோயிலின் கோபுர நுழைவாயில் கதவு பூட்டியிருந்தது. மலையுச்சிக்குச் சென்ற ஒற்றைக் காலடித்தடத்தில் ஏறி நடந்தோம். முள்காடு வறட்சியும் பசுமையும் கலந்து காணப்பட்டது.
வழியெங்கும் முற்றிப் பொந்து விழுந்த கிளுவை மரங்களில் முறுக்கி ஏறிய பிரண்டைக் கொடி கள் படர்ந்திருந்தன. காட்டுச் சிலம்பன்களும் வால்காக்கைகளும் குரலிட்டன. காட்டுப்பாதையில் நாங்கள் பேசியபடியே நடந்து நடந்து கொங்கணச் சித்தர் கோயிலைப் போய்ச்சேர்ந்தோம்.