

காங்கேய நாட்டில் கார்மழை, கோடைமழை, பருவமழை என அனைத்தும் பொய்த்தன. கிணறுகளும் குளங்களும் நீர்வற்றிப் போயின. தோட்டவெளிகள் தரிசாயின. பஞ்சத்தின் காரணமாகத் தீவட்டிக் கொள்ளையர்களும் காங்கேய நாட்டுக்குள் நுழைந்து விட்டனர்.
ஒவ்வொரு நடுச்சாமத்திலும் ஏதோவோர் ஊரில் தீவட்டிக் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியபடியே இருந்தனர். அமாவாசை நாளொன்றில் தீவட்டிக் கொள்ளையர்கள் நூறு குதிரைகளில் ஊர் தலைவாசலுக்கு வந்து தாக்கு வதற்குத் திட்டமிட்டனர். தீவட்டிக் கொள்ளையர்களின் தலைவன் உத்தர விட்டான்.
“ஊரைச் சூறையாடுங்கள்… எதிர்ப்பவன் தலையைச் சீவுங்கள்...” நூறு குதிரைகளும் வீதிகளில் உள்நுழைந்து வேகமெடுத்தன. வீட்டுக் கதவுகள் திறந்திருந்தன. விதைத் தானியக் குதிர்கள் காலியாகக் கிடந்தன.
அட்டாலியில் [மரப்பரண்] ஆபரணப்பேழைகள் அகப்பட வில்லை. நூறு குதிரைகளும் ஊர் தலைவாசலுக்குத் திரும்பி வந்தன. தீவட்டிக் கொள்ளையர்களின் தலைவன் கோபத்துடன் கத்தினான்.
“வீட்டுச்சுவர்களை இடித்துத் தள்ளுங்கள்… ஓட்டுக் கூரை யைக் கொளுத்துங்கள்...” அப்போது ஆதிவிநாயகர் சன்னதிக் குள் படுத்திருந்த வயோதிகப் பூசாரி எழுந்து வந்து பாடினார். “தாது வருசம் பிறந்தநாள் முதலாய் தாரணியில் மழையில்லாமல் சலங்கள் வத்திப்போயி எங்கும் நிலங்கள் கிணர் வாவியெல்லாம் இலங்கையைப் போல் தீய்ந்த குறைக்கு என்ன செய்வோம்?” தீவட்டிக் கொள்ளையர்களின் தலைவன் பூசாரியின் நெஞ்சுக்கு நேரெதிரே குத்தீட்டியை நீட்டினான்.
பூசாரி சிரித்தபடியே மீண்டும் பாடினார்.“அதோ தெரியுதே ஆலமரமடா அதனடியில் ஆழத்தோண்டுங்கடா ஆபரணப்பேழைகள் தெரியுமடா… தீவட்டிக் கொள்ளையர்கள் ஆல மரத்தடிக்கு விரைந்தனர்.
கடப்பாரை யால் கடுமையாக வறல்மண்ணைத் தோண்டத் தொடங்கினர். அந்தக் கணத்தில் ஆலமரக்கிளைகளுக்குள் இருந்து கூர்வல்லயங்கள் குறி பார்த்துக் கீழிறங்கின. குனிந்து மண் தோண்டும் தீவட்டிக் கொள்ளையர் களின் முதுகுகளில் குத்தின.