

பவ வருடத்துத் தை மாதத்தின் இளமதிய நேரம். நான் கல்லூரி நண்பர் ஜோதிபாசுவை அவரின் நிலக்கடலை ஆலையில் சந்தித்துவிட்டு, மூலனூர் பேருந்து நிலையத்தில் தாராபுரம் பேருந்துக்காகக் காத்திருந்தேன்.
அப்போது என் எதிரே வந்து நின்ற நபர் ஏதோ கேட்பதற்காகத் தயங்கியபடிக் காத்திருந்தார். தலைமுடியும் மீசையும் பாதி நரைத்திருந்தன. நாற்பது வயதுத் தோற்றத்தில் தொந்தி வயிற்றுடன் குள்ளமாக இருந்தார். நான் அந்த நபரிடம் அதிகாரத் தொனியில் கேட்டேன்.
“என்ன வேணுமுங்க?” “தம்பி… நான் கன்னிவாடிக்கிட்ட ஒரு கல்யாணத்துக்குப் போனேன். காசைத் தொலைச்சுட்டேன். இப்ப நடந்தே இங்கு வந்துட்டேன்.
இங்கிருந்து ஊர் போறதுக்கு பஸ் செலவுக்கு உதவணும்…” “எந்த ஊரு போகணுமுங்க?” “குடிமங்கலம் பக்கம். நீங்க எனக்குத் தாராபுரம் வரைக்கும் டிக்கெட் எடுத்துக் குடுத்தீங்கன்னாகூடப் போதும்.”
அந்த நபர் ஏமாற்றுபவர் இல்லையெனத் தெரிந்தது. பயணச்சீட்டு எடுக்கச் சம்மதித்தேன். அந்த நபரே ஓடிச்சென்று கரூரிலிருந்து வந்து நின்ற அரசுப் பேருந்தில் எனக்கும் சேர்த்து இருக்கை பிடித்தார். நான் தாராபுரம் போய்ச் சேரும்வரை அந்த நபரிடம் எதுவும் பேசவில்லை. தாராபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் கேட்டேன்.
“குடிமங்கலம் வழியாகப் பொள்ளாச்சி போற பஸ் நிற்குது பாருங்க.” “இல்ல தம்பி… நான் நடந்தே போகலா முன்னு இருக்கேன்.” நான் அதிர்ச்சியடைந்தவனாகக் கேட்டேன்.
“என்னாச்சுங்க?” “கல்யாண வீட்டுல ஒரு தப்பு செஞ்சுட்டேன். அதுக்குத் தண்டனையாகத்தான்…” நான் அந்த நபரைப் புரியாமல் பார்த்தேன். அந்த நபர் புழுதி படிந்த செருப்புகள் அணியாத கால்களைப் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.
அவர் கல்யாண வீட்டுக்குள் நுழையும் போதே மணமேடையில் மணமகன் மண மகளுக்குத் தாலிகட்டிக்கொண்டிருந்தார். மங்கல வாழ்த்தும் ஒலித்தது. மணமேடைக்கு முன்புறம் கிடந்த இரும்பு நாற்காலிகளின் பின்வரிசையில் அவர் அமர்ந்துகொண்டார்.