

ஆகாயத்தில் கோடைக் கருமுகில் திரண்டு தூறலாக மழை பெய்தபடி இருந்தது. தோட்டத்து வீட்டிலிருந்து வடக்கே செங்காட்டூர் செல்லும் ஒற்றையடித் தடத்தில் நானும் கண்ணப்பன் அண்ணனும் நொங்குவண்டி ஓட்டி விளையாண்டு கொண்டிருந்தோம். அப்போது ஒற்றைத்தடத்தில் தூரமாகக் கூனல் முதுகுடன் கையில் ஊன்றுத்தடி பிடித்து ஒரு வயோதிக உருவம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டோம். அது யாரெனத் தெரிந்ததும் மனதுக்குள் குதூகலம் பரவிற்று.
நாங்கள் நொங்குவண்டியைத் திருப்பி வீட்டைப் பார்த்து வேகமாக ஓட்டினோம். வாழைத்தோப்புக்குள் கனகாம்பரப்பூ பறித்துக்கொண்டிருந்த தமிழரசி அக்காவும் எங்களோடு சேர்ந்துகொண்டார். தமிழரசி அக்கா கோனேரிபட்டி பெரியம்மாவின் மகள். நாங்கள் பள்ளிக்கூடம் செல்லத்துணை வேண்டும் என்பதற்காக எங்களோடு தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். மூவரும் வீட்டின் வெளித்திண்ணையில் ஏறி நின்று சத்தமிட்டோம்.