

ரக்தாட்சி வருடத்து ஐப்பசி மாதம். புதன்கிழமை நண்பகல் வேளை. தாராபுரம் என்.சி.பி நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பறையில் சாமுவேல் ஆசிரியர் வரலாற்றுப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நானும் சக மாணவர்களும் பசிக் கிறக்கத்துடன் பாடத்தைக் கவனித்தபடி இருந்தோம்.
திடீரெனப் பள்ளியின் முதன்மை நுழைவாயில் பக்கமிருந்து கூச்சலும் பேச்சுச் சத்தமும் எழுந்தன. சாமுவேல் ஆசிரியர் பாடம் நடத்துவதை நிறுத்தி விட்டு நடைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தார். ஏழாம் வகுப்பறையிலிருந்து வெளியேறி வந்த தமிழாசிரியை அன்னபூரணி தணிந்த குரலில் ஏதோ சொல்லிவிட்டு அவசரமாகக் கடந்தார்.
மாடிப்படிகளில் மாணவர்கள் தட தடத்து இறங்கும் ஓசை தொடர்ந்து கேட்டது. எங்களாலும் வெளியே என்ன நடக்கிறது என்று ஊகிக்க முடியவில்லை. சாமுவேல் ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்து கலவரமான முகத்துடன் பேசினார். “நம்ம பாரத பிரதமர் இந்திரா காந்தியச் சுட்டுக் கொன்னுட்டாங் களாம்.
இப்பதான் ரேடியோவுல செய்தி வெளியாயிருக்கு.” நானும் சக மாணவர்களோடு சேர்ந்து புத்தகப் பைக்கட்டைத் தூக்கிக் கொண்டு முதன்மை நுழைவாயிலை நோக்கி ஓடினேன். இளைஞர்கள் சிலர் உருட்டுக்கட்டையுடன் உரத்த குரலில் கோஷமிட்டபடி பள்ளியை மூடச் சொல்லிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் எங்கள் ஊரிலிருந்து வரும் மற்ற மாணவர்களும் அங்குவந்து சேர்ந்தனர். நாங்கள் விரை வாகப் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். கடைகள் மூடியிருந்தன. பெண்கள் பள்ளியில் படித்துக்கொண் டிருந்த எங்களூர் மாணவிகளும் பேருந்து நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்தனர்.