

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்தி ருக்கும் வாழ்க்கைமுறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும். அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப் பூரணமாக்கும்.
அந்த வகையில் கடலையும் கடல் சார்ந்த வாழ்க்கையையும் சொல்லும்விதமாக இருந்தது ‘கொண்டல் - நெய்தல் நிலைக் கலைகள்’ எனும் ஓவியம், ஒளிப்படக் காட்சி. சென்னை லலித் கலா அகாடமியில் ஜூன் 9 முதல் 16 வரை நடைபெற்றது.
கடற்புற வாழ்க்கையைச் சொல்வதாக இக்கண்காட்சி அமைந்தபோதும் மீனவப் பெண்களின் பார்வையில் கடல், கடலுணவுச் சமையலுக்கும் பெண்களுக்குமான உறவு என்பதைப் பல ஒளிப்படங்கள் பிரதிபலித்தன.
அவற்றின் வழியே, அந்த உலகைப் புரிந்துகொள்கிறோமா என்கிற சுயபரிசோதனையும் நம்மையும் அறியாமல் நிகழ்கிறது. அ.பகத் சிங், ர.நிரஞ்சனா ஆகியோர் தொகுத்த 'நெய்தல் கைமணம்', அந்த நூலுக்காக ஒளிப்படக் கலைஞர் பழனிகுமார், ஓவியர் அந்தோணி குரூஸ் ஆகியோர் அளித்த பங்களிப்புகளின் அடிப்படையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“பிரபல கலைஞர்கள் மட்டுமல்லாமல் சென்னை, புதுச்சேரி, கும்பகோணம் பகுதியிலுள்ள கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்றனர். மீனவப் பின்னணி கொண்டவர்களும் இதில் அடக்கம்” என்கிறார் கண்காட்சிக்கான ஓவியங்களை ஒருங்கிணைத்த ஓவியர் அந்தோணி குரூஸ்.