மெட்ராஸ் தெரியும், அது என்ன சத்ராஸ்? - வரலாற்றுச் சுவடுகள்
கல்பாக்கத்திற்கு அருகில் உள்ளது சதுரங்கப்பட்டினம் என்கிற கடலோரக் கிராமம். பேச்சுவழக்கிலும் பெரும்பாலான ஆவணங்களிலும் ‘சத்ராஸ்' என்றே அழைக்கப்படுகிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே டச்சுக்காரர்கள் இங்குக் கப்பலில் வந்திறங்கி 1606இல் வணிகம் செய்துள்ளனர்.
அவர்கள் வந்த கப்பல் பழவேற்காடு கடற்கரையோரம் தரதட்டியது. கப்பலில் இருந்த மாலுமிகள் தாகத்தால் தவித்தபோது, அவர்களுக்கு உள்ளூர்க் கிராம மக்கள் குடிநீர் வழங்கியுள்ளனர்.
இப்பகுதி வாழ் மக்களின் செங்கல் தயாரிக்கும் தொழில்நுட்பம் டச்சுக் காரர்களை வியக்கவைத்தது. தரமான, கலைநுட்பம் வாய்ந்த அந்தக் கற்களை விலைக்குப் பெற உடன் படிக்கை செய்துகொண்டு, அந்தச் செங்கற் களைக் கப்பலில் ஏற்றி ஐரோப்பா கொண்டுசென்றனர். செங்கல் தயாரிப்புக்கு மிகப்பெரும் தொழிற் கூடங்களை இங்கு நிறுவினர்.
இங்குத் தயாரிக்கப்பட்ட செங்கற் களால் கடலோர இடமான சதுரங்கப் பட்டினத்தைத் தேர்ந்தெடுத்து கோட் டையை நிர்மாணித்தனர். இப்பகுதி மக்கள் மஸ்லின் துணி தயாரிப்பில் அன்றைக்குச் சிறந்து விளங்கினர். மஸ்லின் துணி அழகில் மயங்கிய டச்சு கிழக்கிந்திய கம்பெனி அவற்றையும் கப்பலில் ஏற்றி ஐரோப்பாவில் விற்பனை செய்தனர்.
மஸ்லின் துணி நெசவுக்கூடங்களையும் இங்குக் கட்டினர். இதைத் தவிர, சமையலுக்கும் பயனாகும் வாசனாதி மசாலா திரவியங்கள், ஆடம்பர அணிகலன்களுக்கு அழகுசேர்க்கும் வண்ணமணி அலங்காரம் ஆகிய வற்றுக்கும் ஐரோப்பாவில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
கூடிய விரைவில் நீண்ட வீதிகளும், கடற்கரையை நோக்கி நிற்கும் கம்பீரமான கோட்டையும், நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பல்களும், வணிகர்கள் வளையவரும் ஓசைமிகு துறைமுக நகரமாகவும் சதுரங்கப்பட்டினம் மாறியது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி யின் சென்னப்பட்டினம்போல் இது சதுரங்கப்பட்டினம் என்று பெயர் பெற்றது. MADRAS என்பதற்கு இணை யாக SADRAS உருவாயிற்று.
