

சமையல் என்பது பகலில் செய்வதா, இரவில் செய்வதா என்பதை ஊரின் வாழ்க்கை முறைதான் ஒரு காலத்தில் தீர்மானித்தது. அதைக் கணக்கிட்டே சந்தை கூடும். எங்கள் ஊரில் (கள்ளிகுளம்) பெரிய சந்தை கிடையாது. ஆனால், மீன்கடை என ஓர் இடம் உண்டு. மீன்கடை என்பது ஓடு வேயப்பட்ட ஒரு பெரிய திறந்தவெளி அரங்கம் கொண்ட வளாகம். அதனுள் மீனும் கருவாடும் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
கடலிலிருந்து காலை, மாலை என இரண்டு வேளை மீன்பிடித்து விட்டுக் கரைக்கு வருவார்கள். விடியற் காலை மடி (படகு) மீன் மதியம் சமையல் செய்யும் வழக்கம் கொண்ட ஊர்களுக்குப் போகும். குடும்பமே வேலை செய்யப் போகும் ஊர்களில், பகலில் சமையல் இருக்காது. அதனால் இரண்டு, மூன்று மணி அளவில் இரண்டாவது தவணை மீன் வரும். அதை வாங்கிவந்து மாலை விற்பார்கள். மாலை மீன் வரும் போது வெயிலின் கொடுமை இருக்காது என்பதால், அதற்கு ‘அந்திக் கடை’ என்று பெயர்.
1975 காலக்கட்டத்திற்குப் பின் சமையல் என்பது பரவலாக மதியத்துக்கு மாறியது. இதனால் மீன்கடை ஒன்பது மணிக்கே களைகட்டத் தொடங்கியது. தெருவில் பொருள்களைக் கொண்டுவந்து விற்கும் வணிகர்கள்கூட மீன்கடைக்கு வெளியே வைத்து விற்றுவிட்டுத்தான் ஊருக்குள் வருவார்கள். ஆண்கள் சைக்கிளில் சென்று கடற்கரை ஊர்களிலிருந்து மீன் வாங்கி வருவார்கள். குறுக்குப்பாதையாகச் சென் றால்கூட 10 - 15 மைல்கள் இருக்கும்.