

கடவுளின் தேசத்தில் கடவுள்கள் ஆடும் நடனம் தெய்யம். கேரளத்தில் சுமார் 456 வகையான தெய்யக் கோலங்கள் இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 112 தெய்யங்கள் புகழ்பெற்றவை. பல தெய்யம் ஆட்டங்களில் நெருப்பை முதன்மையாக வைத்துச் சடங்குகள் நடைபெறுகின்றன.
ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த பழங்குடிகளின் வழிபாடு இது. பெண் தெய்வத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. எனினும் ஆடுவது பெண் வேடமிட்ட ஆண்களே. ஒடுக்கப்பட்ட மக்கள் தெய்வமாகி ஆசி தர, மற்றவர்கள் அவரை வணங்குவது தெய்யத்தின் சிறப்பு. காலப்போக்கில் புராணக் கதைகளும் இணைந்துகொண்டுள்ளன.
இந்தத் தெய்வங்களின் நடனம் வடக்கு மலபார் பகுதிகளின் மரபாக உள்ளது. கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கரிவெள்ளூர், குருமத்தூர், ஏழோம், செருக்குன்னுபோன்ற ஊர்களில் தெய்யம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் தொடங்கி ஏப்ரல் வரையிலும் அவரவர் வசதிப்படி ஓரிரு இரவுகள் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. குலதெய்வத்தை வழிபடும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்று, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மக்களை அழைத்துச் செல்கின்றனர்.
காவுத் தெய்யம்
மாங்காடு வெள்ளிக்கீல் தறவாடு தொண்டச்சன் தேவஸ்தானம். அதுதான் நாங்கள் காவுத் தெய்யம் பார்க்கவிருந்த இடம். வெள்ளாட்டம், கண்டனார் கேளன் ஆட்டம், குடிவீரன் ஆட்டம், தொண்டச்சன் வயநாட்டுக் குலவன் ஆட்டம், குளிகன் ஆட்டம் ஆகியவை அன்றிரவு நடக்க இருந்த தெய்யம் ஆட்டங்கள்.