

செவ்வக வடிவிலான பிளாஸ்டிக் பெட்டி (தக்காளி பெட்டி), அதன் மேல் கிடைமட்டமாக வைக்கப்பட்ட மரப்பலகையில் மின் தராசு, கூடையைச் சுற்றிலும் சிறிய அளவிலான கசங்கிய சாக்குப் பைகள், இருசக்கர வாகனத்தின் முன்புறம் முடிச்சிடப்பட்ட காய்கறி மூட்டைகள்... இவைதான் இன்றைய காய்கறி விற்பவரின் அடையாளங்கள்.
முன்பெல்லாம் விலைகுறைவான, குறிப் பிட்ட சில வகையான காய்கறிகளைக் காலை வேளையில் தலைச்சுமையாகச் சுமந்தவாறு, கிராமத்துத் தெருக்களில் விற்பனை செய்வார்கள். தான் விற்பனைக்கு எடுத்துவரும் சில வகைக் காய்கறிகளின் பெயரைப் பேச்சு மொழியில் கூவியவாறே தெருக்களில் வியாபாரம் செய்வது உண்டு. பெண்கள் தலைச் சுமையாகவும் ஆண்கள் சைக்கிளிலும் வியாபாரம் செய்தனர்.
உள்ளூரில் விளைவிக்கப்படும் கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரை வகைகள் போன்றவற்றைப் பெரும்பாலும் மாலை வேளையில் விற்பனை செய்வது உண்டு. ஆனால், தற்போதெல்லாம் விலை உயர்ந்த பொருள்களைத் தவிர, அனைத்து வகையான பொருள்களும் கிராமத்துத் தெருக்களில் விற்பனை செய்யப்படுகின்றன.