

கூந்தன்குளம் என்றாலே என் நினைவுக்கு வருவது வானை மறைக்கும் பறவைகளின் கூட்டம்தான்! தட்டான்கள் மழைக்காலத்தில் பறப்பது போல, கூந்தன்குளத்தில் கூழைக்கடாக்களும் மஞ்சள் மூக்கு நாரைகளும் வானில் ஒரு பெரிய மேகக் கூட்டம்போல வட்டமிடுவது கண்கொள்ளாக் காட்சி! தட்டான்கள் நம் கைக்கு எட்டும் தூரத்தில் பறக்கும். இவையோ மேலே பறக்கின்றன.
பொதுவாக ஆள் நடமாட்ட மில்லாத இடங்களில்தான் பறவைகள் கூடு கட்டும். ஆனால், இங்கு வரும் பறவைகள் ஊருக்குள் இருக்கும் மரங்களையே தங்கள் வீடாகக் கருதி வாழ்வதுதான் இந்த ஊரின் சிறப்பு. வீடுகளில் வளர்க்கும் மரங்களில்கூட, அவை கூடு கட்டுகின்றன. ஊரில் பல வீடுகள் பழங்காலப் பெரிய வீடுகளாக இருக்கின்றன. இவர்களில் சிலர் வீடுகளுக்குள் சென்று பார்க்கவும் நம்மை அனுமதிக்கிறார்கள்.
ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் நின்று, மிக நெருக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைப் பார்த்தோம்! அதன் நீளமான அலகு முழுவதும் மீன்களை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு குஞ்சுக்கும் ஒவ்வொரு மீனாகக் கொடுத்தது!
90களில் உருப்பெற்றது
கூந்தன்குளம் 1994ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக் கப்பட்டது என்றாலும், அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே பறவைகள் இங்கே வரத் தொடங்கிவிட்டன. அப்போதிருந்தே பறவைகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்ப தற்காக ஊர்மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.