

மும்பைக்குச் சிறிது தெற்கே இருக்கிறது அலிபாக் (Alibaug). அங்குச் செல்ல, கேட் வே ஆஃப் இந்தியாவிலிருந்து மாண்ட்வா வரை படகுகள் உள்ளன. அங்கிருந்து அலிபாக் நகருக்குச் செல்ல பேருந்து வசதி (டிக்கெட்டிலேயே இது அடங்கும்) உண்டு.
காலை சென்றால் மாலை வந்துவிடலாம். சில படகுகளில் நம் வாகனத்தையும் ஏற்றிச் செல்லலாம். ஆனால், மகாராஷ்டிர ஊர்கள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதற்காகச் சாலை வழியாகப் பயணப்பட்டோம்.
வண்ணச் சுவரோவியங்கள் கொண்ட நவிமும்பையைத் தாண்டியபின் முற்றிலும் கிராமங்களும் மலைக்கிராமங் களுமாக இருந்தன. ஆங்காங்கே செந்நிறப் பூக்களுடன் கொன்றை மரங்கள் பூத்துக் கிடந்தன. ஏறக்குறைய நூறு கி.மீ. தூரத்துக்கு நகரங்களோ, பெரிய ஊர்களோ இல்லை என்பது வியப்பாகவே இருந்தது.
பட்டுச்சேலை மணற்பரப்பு
நாங்கள் கிஹிம் பகுதியில் அறை எடுத்திருந் தோம். கடற்கரை நெருங்க நெருங்க, தோட்டத் தின் ஒற்றையடிப் பாதை போன்றே இருந்தது. இவ்வளவுக்கும் புகழ்பெற்ற கடற்கரை. எங்கள் அறை ஒரு தென்னந்தோப்பினுள் இருக்கும் வீட்டினுள் இருந்தது.
வீட்டின் முன்னால் கடல். அறைக்குக்கூடச் செல்லாமல் கடற்கரைக்குத்தான் சென்றோம். பயணக் களைப்பெல்லாம் எங்கே என்று கேட்குமளவிற்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.