

ஊரில் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர் மன்றங்கள் ஆக்ரோஷமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஜெய்சங்கருக்கு ரசிகர் மன்றம் தொடங்கி வியக்க வைத்தவர் பால்கார மணியண்ணன்.
அவர் மகன் ரஜினியின் தீவிர ரசிகராகவும் அவருடைய தம்பி மகன் கமல் ரசிகராகவும் நற்பணிகள் (பட ரிலீஸின்போது பெண்கள் டிக்கெட் கவுன்ட்டரில் சாக்லெட் கொடுப்பது) செய்துவந்த காலத்தில், புரூஸ் லீக்கு ரசிகர் மன்றம் தொடங்கி ஆச்சரியப்பட வைத்தான், மும்பையில் வேலை பார்த்துவிட்டு வந்த வன்னிய நம்பி! அவன் மன்றம் ஆரம்பித்த காலத்தில் புரூஸ் லீ உயிருடன் இல்லை.
சில உள்ளூர்ப் பெரியவர்கள், ‘அது யாருல பெருசுலீ' என்று கேட்க ஆரம்பித்திருந்தார்கள். அவர்களிடம், புரூஸ் லீ யார் என்று புரியவைப்பதற்கே போராட வேண்டியிருந்தது. ஊரில் பெரிய மீசை வைத்திருக்கிற பேச்சி தாத்தா, ‘அவங் இந்தி நடிகரால?' என்று கேட்டார்.
‘நல்லா கேட்டேரு, ஹாலிவுட்டு நடிகராங்கும்.' “தமிழ்ல எந்தப் படத்துல நடிச்சிருக்காங்?” “நா என்ன சொல்லிட்டிருக்கென்... நீரு என்ன கேட்டுட்டு இருக்கேரு? அவரு சைனீஸ்... ஹாலிவுட்டு நடிகரு.” “சைனாவா? அவ்வோ ஊர்ல ரசிகர் மன்றம் வைக்க ஆளுவோ இல்லயோ?” “யோவ் தாத்தா, அவருக்கு உலகம் பூரா ஃபேன்ஸ் உண்டும்.”