

‘பெரியவங்க பேசுகிற இடத்தில் சின்னப் பயலுக்கு என்னலே வேலை, ஓடுங்க’ என்று விரட்டி விடுவதுதான் பெரியவர்களின் பொதுவான இயல்பு. ஆனால், என் அப்பாவும் அவர் நண்பர்களும் பேசிக் கொண்டிருக்கையில், நான் அங்கே போனால் அப்பா விரட்ட மாட்டார். என்னைவிட மூத்தவர்களிடம் எனக்குக் கொஞ்சம் நல்ல பெயர் உண்டு. அதனால் என்னைக் கண்டதும், `வேமைனர் என்ன நடக்கு, இப்ப என்ன படிக்கேரு’ என்று விசாரிப்பார்கள். நானும் பதில் சொல்வேன்.
பாட சம்பந்தமாகவோ, பொது அறிவு சம்பந்த மாகவோ கேள்வி கேட்டால் பெரும்பாலும் சரியான பதில் சொல்வேன். அதனால் அப்பாவின் சிநேகிதர்களும் என்னை அவர்கள் மத்தியில் சற்று நேரம் அனுமதிப்பார்கள். சமயத்தில், அதிகப்பிரசங்கமாகப் பதில் சொல்லும்போது, சித்தப்பா மட்டும், `டேய் `அ.பி’ (அதிகப்பிரசங்கி) போ, போய் உன் சேக்காளிங்ககூட விளையாடு’ என்று அனுப்பிவிடுவார். அவர்கள் பாராட்டி னாலும் கடிந்துகொண்டாலும் அப்பா மௌ னமாகவே இருப்பார்.