

`திருநெல்வேலியான் தேர் பாரான் திருச்செந்தூரான் கடலாடான்' என்றொரு சொலவடை சொல்வார்கள். ஒரு விஷயம் ஓர் ஊரில் பிரபலமாக இருக்கும், நான்கு ஊரில் அதைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அந்த ஊர் மக்கள் அதை விரும்பிப் பார்க்க மாட்டார்கள். திருநெல்வேலியில் தேரோட்டம் பிரபலம், ஆனால் அங்கே சிலர், `எங்கே போயிரப்போகுது, நம்ம ஊரு தேருதானே எப்படியும் ரெண்டு, மூணு நாளு நம்ம சனங்க தேரை இழுத்துத் தெருவில நிப்பாட்டி வச்சிருப்பாங்க.
நாளைக்குப் பாத்துக்கிட்டாப் போச்சு’ என்று மெத் தனமா இருப்பார்கள். அவர்கள் நினைக் கிற மாதிரி ஆனித் தேரோட்டத்தில் அப்போதெல்லாம் ஒரு நாளில் தேர் நிலையம் சேரவும் சேராது. குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும். முதல் நாள் மட்டும்தான் நல்ல நேரம் பார்த்துக் காலை நேரத்தில் தேர்இழுப்பார்கள். மற்ற நாட்களில் தேர் இழுப்பதெல்லாம் மாலை நான்கு மணிக்கு மேல் `வெயில் தாழத்’தான், அதாவது சூரியன் தாழ்ந்து மலையில் விழும் சாயங்காலத்தில்தான் இழுப்பார்கள்.