

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கை யில் (1959) `அரை’ அணா (மூன்று நயா பைசா) விலையில் `அணில்’ என்று ஒரு சிறார் பத்திரிகை வரும். தினசரி நாளிதழைக் குறுக்கே மடித்த Tabloid மாதிரி நான்கு பக்கங்கள். சக்தி வை.கோவிந்தன் தான் ஆசிரியர். (பின்னர் அணில் அண்ணா என்கிற பெயரில் புத்தக வடிவில் பாண்டிச்சேரியில் இருந்து ஓர் இதழ் வந்தது). அணில் பத்திரிகை வாங்கக் கடையில் சொல்லி வைக்க வேண்டும். வருகிற மூன்று பத்திரிகை களை இரண்டு பேர் வாடிக்கையாக வாங்குவார்கள். நான் அவ்வப்போது என் அப்பாவின் கடன் கணக்கில் வாங்குவேன்.
கடைக்கார அண்ணாச்சி, ``உனக்குக் கொடுத்தால் கடனுக்குத் தரணும், அவங்களாம் `ரொக்கப் புள்ளி’ல்லா, (ரெடியாகக் காசு தருபவர்கள்). ஆனால், நீ மிட்டாய் வாங்கித் திங்கிறதைவிட இது நல்ல விஷயம்தான், ஒண்ணு செய்யி ஓரமா நின்னு படிச்சிட்டுக் குடுத்திரு” என்பார். ஆனால், நான் வாங்கிவிடு வேன். நண்பர்களுக்குத் தர வேண்டுமே.