

பள்ளியில் சேரும்போது ஒரு பையில் சிலேட்டும் குச்சியும் போட்டுத் தருவார்கள். கொஞ்சம் வசதியான வீடாக இருந்தால் ஜோல்னாபை, நடுத்தர வீடுகளில் பழைய துணியில் தைத்த பை அல்லது மஞ்சள் பை என இருக்கும். மதிய உணவு என்பது ஏழைகளுக்கு மட்டும் ஒரு நாள் கோதுமை ரவை; இன்னொரு நாள் உளுந்தங்கஞ்சி என இருந்த காலக்கட்டம் அது.
தண்ணீர் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பாட்டில், தோளில் தொங்கவிடும் அமைப்பில் அது இருப்பதால் அது ‘வாட்டர் பேக்’. மதியம் சாப்பாட்டிற்குப் பெரும்பாலானோர் வீட்டிற்குப் போய்விடுவோம் என்பதால், எல்லாருக்கும் அது தேவை இருக்காது. பென்சில், நோட்டு, புத்தகம், அழிப்பான் எல்லாம் கைக்கு வருவதே மூன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான். ஆங்கிலம் அறிமுகம் ஆவதும் இந்த வகுப்பில்தான்.