

பிளஸ் 2 எட்டிப் பார்த்திராத காலம். எஸ்எஸ்எல்சி என்கிற பதினோ ராம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு மும்முரமாகப் படித்தோம். அதில் 400/600 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுவிட்டால் தொலைபேசி, தபால் துறை, வங்கிகளில் எழுத்தர் வேலை உறுதி. வெள்ளைத்தாளில் எழுதி விண்ணப்பித் தால் போதும். பகலில் சித்திரை வெயில் வாட்டினால், இரவில் வற்றிச் சாக்கடையான வாய்க்காலில் உற்பத்தியாகும் கொசுக்கள் படையெடுத்துக் கடிக்கும்.
சொறிந்து மாளாது. அப்போதுதான் ஒரு மாமா சொன்னார், “வே பூதத்தான் முக்கு ‘சிங்கக்குட்டி லேகியம் கிடைக்கும்’ கடையில் ‘ஓடோமஸ்’ன்னு புதுசா ஒரு களிம்பு விக்கறாங்க, அதை வாங்கித் தேச்சுக்கிட்டே ருன்னா கொசு கடிக்காது. நிம்மதியாகப் படிக்கலாம், கூடவே சொகமா தூக்கம் வந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை.” அந்த மாமாவுக்கு எந்தக் கடையில் எது கிடைக்கும், எங்கே விலை மலிவு என்பதெல்லாம் அத்துப்படி.