

அன்றைய கிராமங்களில் கிணறுகள்தான் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தன. சிறு கிராமத்திலும் குறைந்தது மூன்று கிணறுகளாவது இருக்கும். இவற்றில் ஒரு கிணற்றின் நீரைக் குடிநீருக்கும் பிற கிணற்றின் நீரை இதர உபயோகத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஏனென்றால் ஒவ்வொரு கிணற்று நீரின் சுவையும் வித்தியாசமாகவே இருக்கும்.
கிராமத்தில் உள்ள கிணறுகள் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் இருக்கும். ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒரு பெயர் உண்டு. மக்களால் அமைக்கப்பட்ட கிணறு என்றால், அது அமைந்திருக்கும் கோயில், தெரு, திசையின் பெயருடன் அழைக்கப்படும். தனிநபரால் அமைக்கப்பட்ட கிணறு என்றால், அவர் பெயரில் அழைக்கப்படும்.