

அம்மா தன் அப்பாவை `அம்மானோ” என்றுதான் கூப்பிடுவார். அவரின் அம்மா சீக்கிரமே இறந்து போய்விட்டார். ஒத்தைக்கு ஒரு பிள்ளையான அவரை அப்பாதான் அம்மாவைப் போலக் கவனித்துக்கொண்டார். அதனாலோ என்னவோ அம்மான் என்றே அழைப்பார்.
பதினைந்து வயதிலேயே கல்யாணம் கட்டிக் கொடுத்துவிட்டார். பக்கத்து ஊர்தான் என்றாலும் அவர் காலத்தில் மாட்டு வண்டியும் குதிரை வண்டியும்தான் பயணம் செய்ய. முப்பது மைல் தூரத்தில் உள்ள திருச்செந்தூர், கழுகுமலை, சங்கரன் கோயிலுக்கு எல்லாம் வண்டியில்தான் போக்குவரத்து. அவரின் ஊர் டவுனிலிருந்து எட்டு, ஒன்பது மைல் தூரத்தில்.