

இந்தியாவின் வெற்றிகரமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு களில் ஒன்றாகத் திகழும் ‘ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை இடைமுகப்பு’ (UPI), பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ், ‘இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்தால்’ (NPCI) 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, இந்தியர்கள் பணத்தை அனுப்பும், பெறும், செலவழிக்கும் முறையை அடிப்படையிலேயே மாற்றியமைத்துள்ளது.
வங்கிகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றத்துக்கான ஓர் எளிய தளமாகத் தொடங்கப்பட்ட இது, பத்தாண்டுக்குள் (ஒரு தசாப்தம்) இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டமைப்பின் முதுகெலும்பாக மாறியுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனையின் வளர்ச்சி
யுபிஐயின் வளர்ச்சிப் பயணம் வியக்கத்தக்கது. அதன் முதல் நிதியாண்டான 2016-17-ல், இத்தளம் 1.78 கோடி பரிவர்த்தனைகளை மட்டுமே பதிவு செய்தது; இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.0.07 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டுக்குள், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 24,162 கோடியாகவும், மொத்த பரிவர்த்தனை மதிப்பு சுமார் ரூ.314 லட்சம் கோடியாகவும் உயர்ந்தது.
இது ஒரு வினாடிக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனை! ஒரு தசாப்த காலத்தில் பரிவர்த்தனை எண்ணிக்கை சுமார் 13,000 மடங்கு, மதிப்பில் சுமார் 4,000 மடங்கு உயர்ந்துள்ளது.
இன்று யுபிஐயின் செயல்பாட்டு அளவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. 2026-ல், இது தினமும் சராசரியாக சுமார் 66 கோடி பரிவர்த்தனைகளைக் கையாள்கிறது. 2026 ஜூலை மாதத்தில் மட்டும் வரலாற்றுச் சாதனையாக 2,366 கோடி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டன; இதன் மதிப்பு சுமார் ரூ.29.88 லட்சம் கோடியாகும்.
அறிமுகத்தின் போது 21 வங்கிகள் மட்டுமே இதில் பங்கேற்ற நிலையில், தற்போது இக்கட்டமைப்பு 741 வங்கிகளை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது; மேலும், 2026 ஜூன் மாத நிலவரப்படி இதில் இணைந்த பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.5 கோடியை எட்டியுள்ளது.