

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கான பிரத்யேக முதலீட்டு தளமான லக்ஸ்மே மற்றும் இஒய் இந்தியா (Lxme and EY) ஆகியவை இணைந்து ‘பெண்களின் செல்வத்தை மீட்டெடுத்தல்: பயன்படுத்தப்படாத பொருளாதாரம்’ (Unlocking Her Wealth: The Untapped Economy) என்ற ஒரு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில் முதலீடு, சொத்துரிமை, வங்கிக் கணக்கு ஆகியவற்றில் பெண்களின் நிலை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 4,000 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 55% பேருக்கு பரஸ்பர நிதி (Mutual Fund) பற்றி தெரிந்திருக்கிறது. ஆனாலும், 15% பேர் மட்டுமே தற்போது முதலீடு செய்கின்றனர்.
குறிப்பாக பரஸ்பர நிதி முதலீட்டில் பெண்களின் பங்களிப்பு வெறும் 25% மட்டுமே உள்ளது. மேலும், பெண்கள் பொதுவாக ஆண்களைவிட ஐந்து ஆண்டுகள் தாமதமாகவே முதலீடு செய்யத் தொடங்குகின்றனர். இவர்களின் முதல் முதலீட்டுத் தொகை ஆண்களின் முதலீட்டில் பாதியாகவே உள்ளது.
பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீட்டாளர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே பெண்கள் என்றும், குறித்த கால (எஸ்ஐபி) முதலீட்டு கணக்குகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே பெண்களுடையது என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.