

டாடா குழுமம் என்பது உப்பு, மென்பொருள், இரும்பு, வாகன உற்பத்தி, முதல் விமானப் போக்குவரத்து வரை பரந்து விரிந்த ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்யம். இக்குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், குழுமத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.
இத்தகைய உயர்ந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் டாடா குழுமத்துக்குள் மட்டுமின்றி, இந்தியப் பங்குச்சந்தை மற்றும் ஒட்டுமொத்த தொழில் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. இதனால்தான், கடந்த 10 ஆண்டுகளாக குழுமத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் சென்ற என். சந்திரசேகரனின் தற்போதைய அறிவிப்பு, வணிக உலகில் ஒரு பேசுபொருளாகவும் பெரும் விவாதமாகவும் மாறியுள்ளது.
என். சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து ‘விலகுகிறார்’ என்ற செய்தி வெளியானதும், பலரும் இதனை ஒரு திடீர் ராஜினாமாவாகவே புரிந்துகொண்டனர். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் சந்திரசேகரன் தனது தற்போதைய பதவிக்காலம் முடியும் 2027 பிப்ரவரி 20 வரை முழுமையாகப் பொறுப்பில் தொடர்கிறார்.
அவர் எடுத்திருக்கும் முடிவு, அந்தப் பதவிக்காலம் முடிந்தபின் தனக்கு வழங்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்ட ஐந்தாண்டு நீட்டிப்பை ஏற்காதது மட்டுமே. அதாவது, இது ஓர் உடனடி வெளியேற்றம் அல்ல.. ஒரு திட்டமிட்ட, கண்ணியமான அதிகார மாற்றத் திட்டம்.
சந்திரசேகரன் ஒரு சாதாரணப் பயிற்சி பொறியாளராக டாடா குழுமத்தில் இணைந்தவர். சுமார் 40 ஆண்டுகால சேவையில், கடந்த பத்தாண்டுகளாக டாடா சன்ஸ் தலைவராக இருந்து குழுமத்தை ஒரு புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்.
அவரது தலைமையின் கீழ், டாடா குழுமம் பாரம்பரிய தொழில்களைத் தாண்டி, விமானப் போக்குவரத்து (ஏர் இந்தியா ஒருங்கிணைப்பு), செமி கண்டக்டர்கள், மின்னணுவியல் உற்பத்தி, பேட்டரிகள், டிஜிட்டல் வணிகங்கள் ஆகிய எதிர்காலத் துறைகளில் தடம் பதித்தது. இந்தியாவின் உயர்தொழில்நுட்ப எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சுமார் 120 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் மீதான சைபர் தாக்குதல், TCS நிறுவனம் எதிர்கொண்ட சந்தை அழுத்தம், ஏர் இந்தியா ஒருங்கிணைப்பு, ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து நடந்த ஒழுங்குமுறை ஆய்வுகள் போன்ற பல சிக்கலான சவால்களை அவர் நிதானமாகக் கையாண்டார்.