

அமெரிக்காவின் டல்லாஸ் நகரம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்தப் பரபரப்புக்கு மத்தியிலும், கண்ணைக் கவரும் உயரமான ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் பிரின்ஸி.
நைஜீரியாவிலிருந்து நல்ல எதிர்காலத்தைத் தேடி அமெரிக்கா வந்தவள் அவள். கடினமாகப் படித்து, பொறியியல் பட்டமும் பெற்று, அமெரிக்கர்கள் பலரும் கனவு காணும் ஒரு சிறந்த 'டெக்' வேலையையும் பெற்றாள். அவளது ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 180,000 டாலர்கள் (ரூ.1.5 கோடிக்கும் மேல்).
சொந்த ஊரில் இருக்கும் அவளது பெற்றோருக்கு அவள் தான் எல்லாமே. “எங்க மகள் அமெரிக்காவில் பெரிய வேலையில் இருக்கிறாள்” என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டார்கள். பிரின்ஸியும் தன் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து பண உதவிகளையும் தவறாமல் செய்து வந்தாள்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அவள் வாழ்க்கையின் உச்சியைத் தொட்டுவிட்ட ஒரு அதிர்ஷ்டசாலியாகவே தெரிந்தாள். ஆனால், உண்மை முற்றிலும் வேறாக இருந்தது.
வெளியில் அரியணை, உள்ளே சிறைச்சாலை
பிரின்ஸி ஒருநாள் சமூக வலைதளத்தில் தன் உள்ளக் குமுறலை பகிர்ந்து கொண்டாள். அதில், “நான் அமெரிக்காவில் வருஷத்துக்கு 1,80,000 டாலர் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். ஆனால், என் வாழ்க்கையை நான் வெறுத்ததால், தினமும் இரவில் அழுது கொண்டேதான் தூங்கச் செல்வேன்” என பதிவிட்டிருந்தார்.
வாரத்துக்கு 70 மணி நேரத்துக்கும் மேலான வேலைப்பளு, தீராத மனக்கவலை, உள்ளுக்குள் ஒரு பெரிய வெறுமை. ஊரில் இருக்கும் எல்லோருக்கும் அவள் ‘ஜெயித்தவள்’, ஆனால் அவளுக்குள்ளோ அவள் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தாள்.