

உடம்பை மூடிக்கொள்ள ஒரு துணி தேவை என்பது அடிப்படைத் தேவை. ஆனால், அதற்காக மட்டுமா இப்போதைய துணிகள் இருக்கின்றன? அவற்றுக்கான விலை முடிவு செய்யப்படுகின்றன? ஆரம்பத்தில் உடலைப் போர்த்திக்கொள்ள ஏதோ ஒரு துணி தேவைப்பட்டது.
பிறகு, அந்தத் துணி வெட்டித் தைக்கப்பட்டது. அந்த சட்டையில் காலர் வைத்து, சட்டைப் பாக்கெட் வைத்து, அந்த பாக்கெட்டில் கூடுதல் பட்டன் வைத்து, பாக்கெட் மேல், மூடிபோல ‘பிளிப்’ வைத்து… என விற்பனையாளருக்கு விற்பனையாளர் ஏதாவது கூடுதலாகச் செய்து, அதிக விலைக்கு விற்கிறார்கள்.
வருமானம் கூடி இருக்கிற மக்கள், விருப்பப்பட்டதை கூடுதல் பணம் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள். தவிர, சிலர் மற்றவர்கள் பயன்படுத்துவதை பயன்படுத்தக் கூடாது என்பதைக் கொள்கையாக வைத்துக்கொண்டு, கூடுதல் விலையில் விற்கப்படும் அதே பொருட்களை, சேவைகளைத் தேடுகிறார்கள். ஒரு பெரிய பிராண்ட் நிறுவனம் இப்போது உள்ளாடைகளையும் விற்கிறது. பெண்கள் அணியும் உள் பாவாடை பொதுவாக ரூ.300 முதல் ரூ.500 வரை விலை இருக்கும்.
ஆனால் அதை ரூபாய் ரூ.1,200-க்கு விற்கிறார்கள். நன்கு விற்பனையாகிறது. அதன் துணி சற்றுக் கூடுதல் தரமாக இருக்கலாம். அதற்காக இவ்வளவு விலையா? அந்த விலையிலும் மக்கள் வாங்கக் காரணம், அதில் உள்ள இரு வேறுபாடுகள். ஒன்று, அதில் இடுப்பைச் சுற்றிக் கட்ட கயிற்றுக்கு பதிலாக, நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய எலாஸ்டிக். இரண்டாவது, முட்டிக் காலுக்கு சற்று மேலிருந்து கீழ் வரை, ’அம்ப்ரல்லா கட்டிங்’ என்ற கூடுதல் அகலமான அமைப்பு.