

வணிகவியல் படித்த இரு இளம் பெண்கள், ஒரு 'டீப்-டெக்' பேட்டரி நிறுவனத்தைத் தொடங்கி, உலகப் புகழ்பெற்ற 'ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30' (Forbes 30 Under 30) பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள் இரட்டைச் சகோதரிகளான நிஷிதா மற்றும் நிகிதா பாலியார் சிங். இவர்கள் தொடங்கிய ‘நெக்ஸஸ் பவர்’ நிறுவனத்தின் வெற்றிப் பாதை மிகவும் கரடுமுரடானது.
பள்ளியில் படித்தபோதே நிர்வாகத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைத்தது. 11-ம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்தபோது, அவர்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, "உங்களுக்குள் ஒரு சிறந்த தொழில்முனைவோரை நான் பார்க்கிறேன்" என்று நம்பிக்கை ஊட்டினார் அவர்கள் படித்த சாய் இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனத் தலைவர் விஜய குமார் சாஹு. அந்த ஒற்றை நம்பிக்கைதான் பின்னாளில் இவர்களைப் பெரிய இலக்கை நோக்கிச் சிந்திக்க வைத்தது.
சிறுவயது முதலே இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர்கள், 2017-18 காலகட்டத்தில் மின்சார வாகனங்களை தயாரிக்கவே விரும்பினர். ஆனால், அதற்கான முன்மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியபோதுதான், உண்மையான சவாலே வாகனத்தில் இல்லை; அதை இயக்கும் 'பேட்டரி'யில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தனர்.