

பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரம், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பான கொள்கைகள் ஆகியவற்றின் மூலம், தொழில் வளர்ச்சியிலும் தனிநபர் முன்னேற்றத்திலும் ஒரு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தன்னை நிலைநிறுத்தி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2024-25-ம் ஆண்டில் மாநிலம் 11.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் இதுவே மிகவும் அதிகமான வளர்ச்சியாகும். இது தமிழ்நாடு மாநிலத்தின் வளர்ச்சியைத் தெளிவாக காட்டுகிறது. சிறந்த கல்வியறிவு, தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் சிறப்பான மனிதவளத்தை தமிழ்நாடு தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன், அதிக உற்பத்தித் திறன் மற்றும் சிறந்த செயல்படுகளாலும் மாநிலம் பயனடைகிறது.
இது உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் ஆகிய இரண்டுக்கும் ஆதரவளிக் கக்கூடிய திறமையான பணியாளர்களை உறுதி செய்கிறது என்று அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுகிறது.
இந்த வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீபெரும்புதூரை விடச் சிறப்பாக வேறு எந்த ஊரையும் விளக்கிவிட முடியாது. முக்கியமாக விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த இந்தப் பகுதி, கடந்த 1990-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு கொரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் வருகை காரணமாக உலகளாவிய உற்பத்தி வரை படத்தில் முதன்முதலாக இடம் பிடித்தது.
காலப்போக்கில், இங்கு தொழில் துறை விரிவடைந்தது. கடந்த 2007-ம் ஆண்டில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சுங்குவார்சத்திரத்தில் தனது ஆலையை நிறுவ முடிவு செய்தது. அந்த முடிவு இப்பகுதியை ஒரு வாகன உற்பத்தி மையத்திலிருந்து ஒரு பெரிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையமாக மாற்றியது.
சர்வதேச நிறுவனங்கள்
இன்று, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாம்சங், பாக்ஸ்கான், ப்ளெக்ஸ், சால்ட் காம்ப் மற்றும் டெல் உள்ளிட்ட பல உலகளாவிய மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அத்துடன், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கான மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான உதிரிபாகங்களை வழங்கும் ஏராளமான நிறுவனங்களும் இங்கு செயல்படுகின்றன. இப்பகுதி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, ஒரு முக்கிய வேலைவாய்ப்பு மையமாக உருவெடுத்துள்ளது.